top of page

வாசிப்பு கலாசாரமும் அதன் முக்கியத்துவத்துவமும்-: இலங்கை தொடர்பான நிலைமைகளும் முயற்சிகளும் குறித்த ஒரு சுருக்கமான பார்வை.

  • nalayiniindran
  • Aug 1, 2021
  • 2 min read

Updated: Apr 18


வாசிப்பின் முக்கியத்துவம் பரவலாக முன்னெடுக்கப்படாத நிலையிலும் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படாமலும் பல சமூகங்களிலும் பல தளங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. பல நெருக்கடிகள், சமூக பொருளாதார சூழ்நிலைகள், போர்க்கால நிலைமைகள் என பல காரணங்களினால் வாசிப்பு பழக்கம் மற்றும் தன்னார்வ வாசிப்பு என்பனவாசிப்பு பழக்கம் 

மற்றும் தன்னார்வ வாசிப்பு என்பன முன்னெடுக்கப்படாமல் 

தவிர்க்கப்படுகின்றன.


அத்துடன் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய ஆழமான விளக்கங்கள் இன்மையாலும், அதைப்பற்றி எடுத்துரைக்கப்படாததாலும் தன்னார்வ வாசிப்பானது பல சவால்களை எதிர்நோக்குவதுடன் சில வேளைகளில், வாசிப்பில் அக்கறை காட்டுவதிலும் சிறிய வீழ்ச்சியினையும் காணலாம்.


அத்துடன் மட்டுமல்லாது மின் புத்தகங்கள், போன்ற நிலைகளாலும் வாசிப்பினை எடுத்துச்செல்லலாம் என்ற போதும், அதற்கே உரித்தான சவால்களையும் நாம் நேர்கொண்டு சரியான முறையில் புத்தக தெரிவினை மேற்கொண்டு எடூத்துச்செல்லவேண்டிய 

நிலைப்பாடும் இருக்கின்றது.


ஆகவே இங்கு வாசிப்பு என குறிப்பிடப்படும்போது பொதுவான வாசிப்பு பற்றியே இங்கு குறிப்பிடப்படுகின்றது. தன்னார்வ வாசிப்பு (reading for pleasure) மற்றும் கற்றலுக்கான வாசிப்பு (reading for learning) எனும்போது அவை சந்தோஷத்துடன் வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாகவே குழந்தைப்பருவத்திலிருந்தே வாசிப்பின் அத்தியாவசியத்தினை தெளிவாக வெளிப்படுத்துவதோடு அதற்கான வழிமுறைகளும் 

வகுக்கப்பட வேண்டும்.


வாசிப்பின் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும் தொடர்ந்து வளர்த்து செல்வதற்கும் நூலகங்களும், நூலகர்களும் மற்றும் அவை தொடர்பான பங்குதாரர்களுடனும் தொடர்ந்து முயற்சிகளை எடுப்பது முக்கியமானது. மற்றும் பாடசாலை நூலகங்கள், பொது நூலகங்கள், பல்கலைக்கழக நூலகங்களும் இவை தொடர்பாக இருக்கின்ற பங்குதாரர்களுடனும் இணைந்து வழிமுறைமைகளை அமைத்துக்கொள்ளுதல் அவசியமானது.


வாசி்ப்பும் இலங்கை தொடர்பான போக்குகளும்


இலங்கையில், வாசிப்பு அல்லது வாசிப்பு பழக்கம் என்பது பல தசாப்தங்களாக பாடப்பத்தகங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் அறிவைப் பெறுவதற்காகவும் அல்லது படிப்பதற்காக வும் மேற்கொள்ளப்படும் ஒரு நிலைமை பெரும்பாலும் காணப்பட்டது.

தமிழர் வாழ் பகுதிகளில் 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போர்க்கால நிலைமைகளினால் வாசிப்பும் அதனது முக்கியத்துவமும் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலைமையினை பல ஆய்வுகளிலிருந்து அவதானிக்க கூடியதாக உள்ளது. மேலும் சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலவகையான இடையூறுகளையும் எதிர்நோக்குவதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. வாசிப்பதற்கானபோதியளவு வளங்கள், நேரங்கள் இல்லாததுடன் பலவகையான சமூக பொருளாதார தடைகளும் கூட இருப்பதனை காணலாம். மேலும், வாசிப்பதற்கான சூழல் குறைபாடுகளும் போதியளவு இட ஒதுக்கீடுகள் 

இன்மை மற்றும் போதியளவு நூலகங்கள் இல்லாமையும் வாசிப்பு கலாச்சாரத்தினை ஊக்குவித்தலில் உள்ள இடர்பாடுகளில் சிலவாக காணக்கூடியதாக உள்ளது.


ஆகவே இலங்கையில் வாசிப்புடன் தொடர்பான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் முக்கியமானது. மேலும் வாசிப்பின் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவமும் அதற்கான விழிப்புணர்வும் தெளிவாக அமைக்கப்பட வேண்டும். அத்துடன் வாசிப்பும், தகவல்களை சரியான முறையில் மதிப்பீடு செய்து தேடி எடுத்து கொள்ளல் என்பதும் முழுமையாக நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்களும் வளங்களும் குறைவாக காணப்படுகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.


இருந்தாலும், வாசிப்பினை ஊக்கப்படுத்துவதற்கும், நூலகங்களை உருவாக்குவதற்கும் தற்போது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும், முயற்சிகளும் வரவேற்கத்தக்கது.


வாசிப்பின் பயன்பாடுகள்


மேலும் வாசித்தல் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.


புத்தக வாசிப்பானது பலவகைகளிலும் பிள்ளைகளுக்கும் வயதுவந்தவர்களுக்கும் என அனைவருக்குமே முக்கியமான ஒரு விடயம். அத்துடன், வாசிப்பின். முக்கியத்துவத்துவமும் அதனால் அடையக்கூடும் பயன்களும் மிகவும் முக்கியமானது. தொடர்ந்து வாசிப்பு பழக்கம் உள்ள ஒருவர், பின்வரும் பயன்களை அடையக்கூடிய சந்தர்ப்பங்கள் அமைகின்றன.


மிகவும் சிறப்பாக வாசிக்க பழகிக்கொள்வதுடன், ஆக்கபூர்வமான வலுவூட்டும் சுழற்சி முறையை மேம்படுத்திக்கொள்ள உதவும், அறிவினை விரிவு படுத்திக்கொள்ள முடியும், தன்னம்பிக்கை உள்ளவராக மாற்றிக்கொள்ள உதவும், மிகச்சிறந்த மூளை வலுவை உருவாக்கிக்கொள்ள முடியும். பல தரவுகளின்படி, நன்றாக வாசிக்கும் பழக்கம் உள்ள ஒருவரால் இன்னுமொருவரை விளங்கிக்கொள்ளவோ அல்லது அவர்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் முடிகிறது. மேலும் காத்திரமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளுவதற்கும் வாசிப்பு என்பது வழிகோலுகின்றது..அத்துடன், மேலும் சிறப்பாக சொற்களை தெரிந்து கொள்வதற்கும், அதனை தகுந்த முறையில் பாவித்துக்கொள்வதற்கும் உதவியாக இருக்கும், தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு Alzhiemer’s நோயினால் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்வதற்கும், மனதினை ஆற்றுப்படுத்துவதற்கும் ஆறுதல்படுத்துவதற்கும், மற்றவர்களோடு புரிந்துணர்வு.வுடன் நடந்து கொள்ளவும் வாசிப்பு பெரும்பங்கு வகிக்கிறது. இத்துடன் மிகவும் முக்கியமாக மன ஆரோக்கியத்திற்கும் மற்றும் நல்வாழ்விற்கும் வாசிப்பு என்பது உறுதுணையாக இருக்கின்றது.


வாசிப்பும், அறிவுத்தேடலும், கற்றுக்கொள்ளுதலும் எந்தவிதமான தடையுமில்லாமல் வாழ்க்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள். வாசிப்பு என்பது சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்குவதுடன் சமூக முன்னேற்றத்திற்கும் உதவியானது. எங்கேயும் எப்போதும், நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் நேரத்தை ஒதுக்கி வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


நூலகங்களின் பங்களிப்பு-


பொதுநூலகங்கள், அவர்களுடைய நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள், எவ்வாறு சேவையினை வழங்கப் போகின்றார்கள் என்பன போன்ற செயற்திட்டங்கள் என்பனவற்றை தயார்படுத்தி வைத்திருத்தல் முக்கியமாகின்றது. அத்துடன், வாசகர்களுக்கான நிகழ்வுகள் முறையாக தயார்படுத்தப்படுவதுடன் பிறந்த குழந்தைகளிலிருந்து    வயது முதிர்ந்தவர்கள் வரைக்கும், பொதுவாக ஒவ்வொரு வயதுப்பிரிவினருக்கும் இந்நிகழ்வுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும்.


மேலும், நூலகங்கள், வாசகர்கள் நூலகத்திற்கு வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நூலகத்தின், நூலகம் சார் நிகழ்வுகளை சமூகத்திற்குள் எடுத்துச் செல்லலாம். அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைந்து நிகழ்வுகளைமுறைப்படுத்தலாம். அதன்மூலம், மீ்ண்டும்,  வாசகர்களை மக்களை மீளவும் நூலகங்களுடன் இணைத்துக் கொள்ளுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கலாம்.


நூலகர்கள் தங்களை புதிய போக்குகள் நடைமுறைகளுக்கு ஏற்ப தங்களை தயார்ப்படுத்தி கொள்ளுதல், பயிற்சி   பட்டறைகளில் பங்கெடுப்பதன் மூலம் தொடர்புடைய அறிவினை விரிவுபடுத்திக் 

கொள்ளுதல், கூட்டாக மற்றைய நிறுவனங்களுடன் இணைந்து சேவையினை வழங்குதல் என்பவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


நூலகர்கள்  மற்றும் நூலகங்கள்  பற்றிய பழைய கருத்துக்கோட்பாடுகளிலிருந்து வெளியே வந்து, பொது நூலகங்கள் சமூகத்துடன் இணைந்து செயற்டடுவதன் மூலமே வாசிப்பினை யும், நூலக தரத்தினையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.


இதே போல பாடசாலை நூலகங்கள் தனியே ஒரு சேவையாக இல்லாமல், படிப்பதற்கும், மேலதிக கற்றலூக்குமான ஒரு மூல நிறுவனமாக, ஆசிரியர்களுடன் மற்றும் பாடத்துறைகளுடனும் இணைந்து 

செயற்பட வேண்டும். பாடசாலையின் வாசிப்பு கலாசார விரிவுபடுத்தலுக்கு தெளிவான செயற்திட்டங்களை அமைத்துக்கொள்ளலும் அவசியமானது.


மேலும், மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு முன்பான பிரத்தியேகமான தயார்படுத்தல் வகுப்புகள், பயிற்சிபட்டறைகள் என்பவற்றை திட்டமிட்டு வழங்குதல் மிக முக்கியமானது. தன்னார்வ வாசிப்பினை மட்டுமல்லாது, கற்றலுக்கு உறுதுணையான வாசிப்பினையும் இணைத்து மேம்படுத்தல் 

என்பது  அவசியமானதும் ஆரோக்கியமானதாகும்.

 

பல்கலைக்கழக நூலகங்களைப் பொறுத்தவரையில் அதற்கான ஒரு கட்டுமானம், நிலைப்பாடுகள் இருப்பதாகத் தெரிகின்றது.


வாசகர் மேம்பாட்டு நடவடிக்கைகள்/நிகழ்வுகள்


நிகழ்வுகள்/வாசகர் மேம்பாட்டு நடவடிக்கைகள்.  சகல வயதினருக்குமான நிகழ்வுகள், நடவடிக்கைகள் அவதானமாக தயார்படுத்தப்பட்டு வழங்கப்பட வேண்டும். மேலும் இவை பல்வேறு கூட்டமைப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் வழங்கப்படும் போது நிகழ்வுகளுக்கு ஒரு காத்திரமான தன்மையையும் வாசிப்பினை ஊக்குவிக்கினற ஊடகமாகவும் இருக்கும்

அத்துடன், வாசகர்களை மனதில் வைத்து, அவர்களின் தேவைக்கேற்ப இந்த நிகழ்வுகளை வழங்கலாம்.


சேகரிப்பு முகாமைத்துவம்.  


எல்லாவகையான சேகரங்களையும் சேகரித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அச்சிலான புத்தக சேகரங்கள் மட்டுமன்றி, பல்லூடக சேகரங்களை கூட வாசகர்கள் தேவைக்கேற்ப விரிவுபடுத்தலும் முக்கியமானது.  தனியே சிறுவர் புத்தகங்கள் என ஒரு சேகரிப்பினை வைப்பதிலும் பார்க்க, ஒவ்வொரு வயதுப்பிரிவினருக்கும் ஏற்ப, அவர்களது வாசிப்புத் திறனுக்கு ஏற்ப அவற்றை ஒழுங்கமைத்தல் முக்கியமானது.


புனைகதைகள், நாவல்கள், தகவல் நூல்கள், வரைகலை நாவல்கள், பரிந்துரைக்கப்பட்ட நாவல்கள்/புத்தகங்கள்,  சுயசரிதையில், புனைகதை வகைப்பாடுகள் என பல சேகரப்பிரிவுகளை வாசகர்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். மேலும்,  வாசகர்களது கோரிக்கை களையும்  கவனத்தில் கொள்ளல் அவசியமானது.  இவை இடத்திற்கு இடமும் காலத்திற்கு காலமும் வேறுபடும். வித்தியாசங்களும் நிறையவே ஏற்படும்..


இத்துடன், வாசிப்பதற்கு தயங்குபவர்களும், வாசிப்பதற்கு கஷ்டப்படுபவர்களும் எதிர்நோக்கும் சவால்களை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மட்டுமன்றி, அவர்களுக்கு வாசிப்பினை இலகுவாக்க கூடிய முறையில், பிரத்தியேகமான சேகரங்களை மேம்படுத்துதலும் மிக முக்கியமானது. வாசித்தலில் இடர்பாடுகளை கொண்டுள்ளவர்கள், கண் குறைபாடுகள் உள்ளவர்கள், வேறு மருத்துவ ரீதியான காரணங்களால் வாசிப்பில் ஆர்வம் காட்டாமல் இருப்பவர்களுடைய தேவைகளையும் கவனத்தில் எடுத்து செயற்படுவதும், அவர்களூக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்துவதும் முக்கியமானது.


பெற்றோர்களினதும் நூலகங்களினதும் பங்களிப்பு


வாசிப்பு கலாசாரமானது வீடுகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பொதுவாகவே வீட்டிலிருந்தே உருவாக்கப்படவும் வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுடன் குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கீடு செய்து வாசிப்பதில் ஈடுபடுவது மட்டுமல்லாது அவை தொடர்பான கலந்துரையாடல்களும் வீட்டிலிருந்தும் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிள்ளைகளையும் முயற்சி எடுத்து நூலக நேரங்களை ஒதுக்கி சென்று வருவதோடு புத்தகங்களை வழமையாக இரவல் வாங்குவதும் 

முக்கியமானது.


புத்தகங்கள் மட்டுமல்லாது பத்திரிகைகள, சஞ்சிகைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் என வாசிப்பினை விரிவாக்கிக்கொள்ளலாம். அத்துடன் இலகுவாக கிடைக்கக்கூடிய மின்னூல்களையும் வாசிக்கலாம். இதற்கு பெற்றோர்களை தயார்ப்படுத்தலும் அவர்களை பயிற்றுவித்தலும் 

முக்கியமானது.


தன்னார்வ வாசிப்பு பழக்கமானது ஒருவர் சிறு குழந்தையாக இருக்கும் போதே, பொதுவாக பிறந்த குழந்தையாக இருக்கும் காலகட்டத்தில் இருந்தே 

வாசிப்புப் பழக்கம் அறிமுகப்படுத்தப்படுவது முக்கியமானது.


மட்டுமல்லாது, தன்னார்வ பரந்துபட்ட வாசிப்பானது தொடர்ந்து நடைபெறுவது அவசியமானதுடன், அதனை ஊக்குவிப்பதற்கான சூழ்நிலைகளும் அவர்களை சுற்றி இருக்க வேண்டும்.


நூலகங்களின் உருவாக்கம், புத்தகங்களின் பாவனை அதிகரிப்பு, புத்தக விநியோக அதிகரிப்பு என்பவற்றுடன் வாசிப்பு கலாச்சாரத்தினை உருவாக்குதலும், அதற்கான விழிப்புணர்வும் மிக முக்கியமானது.


முடிவுரை


வாசிப்பு கலாசாரம் ஒரு சமூக முன்னேற்றத்தின் அடிப்படை. நூலகங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் செயற்பட்டால்தான் வாசிப்பு ஓர் உயர் மதிப்புமிக்க கலாசாரமாக வளர முடியும்.

நம் சமூகம் முழுவதும் வாசிப்பின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதனை ஊக்குவிக்கக் கூடிய நிலைப்பாடுகளை உருவாக்குவதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

 
















Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Nalayini's Blog. Proudly created with Wix.com

bottom of page