பெண்கள் பலவகைகளில் பலதுறைகளில் முன்னேறியுள்ளார்கள். முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சனைகள் அடையாளம் காணப்படுகின்றன. விழிப்புணர்வுகள் ஏற்படுகின்றன. தீர்வுகள் காணப்படத்தொடங்குகின்றன. அவை பற்றிய ஆராய்ச்சிகள் விசாலப்படுத்தப்படுகின்றன. வேலைவாய்ப்புகள், கல்வி நிலைமைகள், கண்டுபிடிப்புகள் என கட்டமைப்புகளில் துரித வேகம். ஆனாலும், இன்னமும் நெருக்கடிகள், நெருடல்கள், துரதிஷ்டங்கள், துன்பங்கள் என பல விடயங்கள் பிற்புலத்தில் நடந்து கொண்டுதானிருக்கிறது.
இந்த மாற்றங்கள், இலக்குகள், முன்னேற்றங்கள் திடீரென நடந்தவையல்ல.
19 ம் நூற்றாண்டு கால போராட்டங்கள், 50களில் ஏற்பட்ட மாற்றங்கள், 80கள், 90களில் ஏற்பட்ட திருப்பங்கள், 2000 பிற்பட்ட புதுத்தளங்கள் என பல வழிகளில் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
இன்னமும் எவ்வளவு தூரம் பயணிக்கவேண்டும்? வலிந்து திணிக்கப்பட்ட அல்லது தெரியாமலே திணிக்கப்பட்ட அமைப்பு நிலைமைகளைத்தாண்டி முற்றுமுழுதான பாரபட்சமில்லாத ஒரு சமூகத்தை நோக்கி கட்டியெழுப்ப/உருவாக்க இன்னமும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதில் பல கேள்விகள். விடை இலகுவில் காணமுடியாத கேள்விகள்.
மாற்றங்களும், மாறவேண்டியவைகளும், நிலைப்பாடுகளும், நாடுகளுக்கு நாடு வேறுபடுகின்றன. சமூகங்களுக்கு இடையே வேறுபடுகின்றன. வளர்ச்சி வேகங்களும் வித்தியாசங்களும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
என்றாலும்கூட, ஆணாதிக்க சமுக நிலைப்பாடுகள், சமூக பொருளாதார கட்டமைப்பு வேறுபாடுகள், பண்பாட்டு விழுமியங்களின் அழுத்தங்கள், இவற்றினை பெண்களிடமிருந்து எதிர்பார்க்கும் சமுக அமைப்புகள், என்பன எந்த ஒரு நாட்டிலும் சமூகத்திலும், பிற்புலத்தில் இணையாக ஓடிக்கொண்டுதானிருக்கறது.
இன்னுமொரு விதத்திலும் பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மனிதரையும் சமத்துவத்துடனும், கண்ணியத்துவத்துடனும், எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாது மதிக்கும் ஒரு சமூகத்தினை உருவாக்குதல். அப்படியான சமூகத்தால் மட்டுமே முன்னேற்றமாக சிந்திக்கவும் முடியும், முன்னேற்றமான பாதையில் செல்லவும் முடியும்.